சென்னை: தமிழ்நாடு காவல்துறைக்கு சொந்தமான கட்டடங்கள், நிலங்களை அனைத்துப் பிரிவு காவல் அலுவலர்களும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை அனைத்து காவல்நிலையங்களுக்கும் அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், "காவல் நிலையங்கள், அலுவலகங்கள், காவல் துறைக்குச் சொந்தமான நிலங்களை தூய்மையாக பாதுகாக்கும் பொருட்டாக மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையை தூய்மை நாளாக கடைப்பிடிக்க வேண்டும்.
தூய்மைப் பணியை மேற்பார்வையிட ஒரு காவலரை நியமிக்க வேண்டும். தலைமைப் பொறுப்பு அலுவலர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பார்வையிட்டு, சிறந்த காவல் நிலையங்கள் அல்லது அலுவலகத்தை தேர்வுசெய்து வெகுமதி வழங்க வேண்டும்.
குறிப்பாக தூய்மை நடவடிக்கைகளை காவலர்கள் பின்பற்றுவதில்லை என்று புகார்கள் வந்துள்ளன. எனவே இனிவரும் காலங்களில் மேற்கூரிய அறிவுரையை பின்பற்றி காவல் நிலையங்கள், அலுவலகங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும். வருகிற சனிக்கிழமையன்று (ஏப். 09) தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் குடியிருப்புகள், சுற்றுப்புறத்தையும் தூய்மைசெய்து அதன் அறிக்கையை ஏப்ரல் 11ஆம் தேதிக்குள் டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த அறிவிப்பை தவறாமல் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'இளையராஜா இசையோடு போக்குவரத்து விழிப்புணர்வு'